Monday, September 14, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 2

குறுகுறு பார்வை…துறுதுறு கண்கள்…எனக்கு நேர் பக்கத்து Bench-இல் தான் அவள் அமர்ந்து இருக்கிறாள்…அப்போது எதுவும் தெரியவில்லை.. இவள்தான் என் வாழ்க்கையை மாற்றி அமைக்க போகிறாள் என்று… முதல் இரண்டு வருடங்களில் எதுவும் தெரியவில்லை…பார்த்ததும் இல்லை..தோன்றியதும் இல்லை…பேசியதும் இல்லை… எப்படி முளைத்திருக்கும் என்னுள் அவளை பற்றிய நினைவுகள்…தெரியவில்லை..தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை… அவளை மொளனமாக பார்த்து கடந்து செல்வதிலேயே கவனமாக இருந்தது காலம்..!!!
எனக்கு பெண்களை கண்டால் பிடிக்காது..வெளியில் காட்டிக்கொண்டதும் இல்லை… இயல்பாகவே நான் ஒரு சாது..எதை பற்றியும் கவலை கிடையாது.எதுவும் எனக்கென்று கிடையாது என்ற கருத்தையே காதலாய் பற்றிக்கொண்டு இருப்பவன்.
எனக்கு ஒரு நண்பன் சுகன்….சுகன் பெயரில் மட்டுமல்ல…நிஜத்திலும் என் சுகம்,சோகங்களிலும் பங்கு கொள்பவன்.என் உலகினில் நானும் அவனும் தான் நிஜம்..மற்ற அனைத்தும் கற்பனையே…!!!!
சிறுவயது முதலே…எனக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காத ஒரு காரணமோ…வளர்ந்த காலங்களில் நான் எதிர்பார்த்த அரவணைப்பை… ஒரு கதகதப்பை ஏற்படுத்த முடியாத…தெரியாத…பெண்களையே தேடித்தேடி.... துவண்டு போன ஏமாற்றங்களோ…தான் என்னுள்..இந்த பெண்களை வெறுக்க செய்யும் வலுவான காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.
தாய்மடி கற்பனை..தாய்மடி கனவு..தாயின் அன்பு காணவே முடியாத காணல்..!!!எல்லாம் சேர்ந்து என்னை காலம் என்ற குழியில் போட்டு மூடியது..
முகமுடியுடன் தான் அலைகிறேன்.பசுத்தோள் போர்த்திய புலியாக… சிரித்து பேசி..உள்ளே மரித்து போகும் கடவுள்…தெறித்து சிலிர்க்கும் மிருகம்.. இருந்தும் இயலாத…வெளிப்படுத்த தெரியாத ஒரு கண்ணிவெடி என் வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னமாகி போவது அறியாமல்..   புத்தம் புது ஒற்றை ரோஜாவாய் செடியில் பூத்த அவள்…
ரோஜா பூக்களே இல்லாத ஒரு ஊரில் ஒருவன் வீட்டு தோட்டத்தில் …உள்ள ஒற்றைச்செடியில் ஒரு பூ பூத்தால்..எவ்வளவு ஆனந்தம் தோட்டக்காரனுக்கு…சொல்லவே வேண்டாம்…கூத்தாடுவான்.
அதைப்போலத்தான்…இந்த கண்ணிவெடியின் கள்வெறியால் .. காலங்களில்…காதல்களில்…துயரங்களில்..துக்கங்களில்..தூக்கங்களில்…ஏக்கங்களில்…தடம் பதிக்கப்போகும் அந்தஒற்றை ரோஜாப்பூ….!!! நினைத்தாலே சிலிர்க்கிறது…
பூவிற்கு பெயருண்டோ…??? அஞ்சலி…!!!HOD is Calling you….!!! ஒர் குரல்..அப்போதுதான் தெரிந்தது உன் பெயருக்கும் தனி அழகு உண்டு என்று….அஞ்சலி…!!!
திடுக்கென்று எழுந்தாள் அவள்.தும்பைப்பூ சுடிதார்..நிறத்தைப்போலவே அழகும்.என்னை எரிக்கின்ற அழகு…என் மிருகத்தை குலைக்கின்ற அழகு.என் தனிமை வெறிகளை தகர்கின்ற அழகு,தாண்டவமாடும் அழகு.வகுப்பறையை விட்டு வெளியே வேகமாய் வந்தாள்.
சும்மாவே தாங்க முடியாது..இதுல.. என் ஆளு தனியா வேகமா போகுதே..முடியுமா?? காற்றாய் பின்தொடர்ந்தேன்..ஒற்றை ரோஜா செடியை பத்திரமாய் காக்கும் காவல்காரனாய்,அவள் அழகை ரசித்தபடி..சிரித்தபடி..!!!
யாராவது என்னை பார்த்தால் பைத்தியக்காரன் என்றே சொல்லக்கூடும்.பரவாயில்லை..உனக்காகத்தானே……..!!!!!!!!!
என்ன அவள் எங்கே??கனவில் இருந்த நான்..நனவை விட்டு விட்டேன்..
ஹய்யோ.. staff room… உள்ளே போயிருப்பாளோ.. நான் உள்ளே போகலாமா? என்ன செய்வது..?..முழித்துகொண்டே கதவை திறக்க எத்தனிக்கிறேன்..திறந்ததும் எதிரினில் அவள்.. சற்றும் எதிர்பார்த்ததில்லை.. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உன்னை காண்பேன் என்று…
பிரமை பித்து என்பார்கள்.கேள்விபட்டு இருக்கிறேன்.இப்போது தான் உணர்கிறேன்.என்னை என் கண்களுக்குள் அழகாய் அவள் பார்க்கின்ற நொடிகள்..ஆயிரம் ஆயிரம் கவிதைகள்…!!!வர்ணிக்க முடியாதது,விவரிக்க முடியாதது…கடவுள் போல்…!!!
அந்த குறுகுறு கண்கள்..ஒரு நொடி தான்..கண்டு கொண்டாள்..நான் வளர்க்கும் காதலை…தெரிந்து விட்டது அவளுக்கு… புரிந்து விட்டது எனக்கும்,, வியர்த்து கொட்டியது..படபடத்தது காற்று..மரம்…செடி கொடி.. உயிரற்றது எல்லாம் உயிருடன் உலவுவது போலவும்…
உயிருள்ள எல்லாம் பொம்மைகளாகி உறைந்தது போலவும்… ப்ப்ப்பா…!!!!
அந்த கண்கள்..என்னை முற்றிலும் அடிமையாக்குகிறதே….!!!!
சாசனம் இன்றி…சத்தம் இன்றி..சங்கடம் இன்றி…இதோ இந்த பெண்ணின் கண்கள் ..என்னை மேலும் அழகாக்குகிறதே…!!!

சிரித்துவிட்டு சென்று விட்டாள்.. தொலைத்து விட்டு அதே இடத்திலேயே சிலையாக நின்று கொண்டிருந்தேன் நான்!!!!!

Monday, September 7, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 1

மழை ஓய்ந்து இருக்கிறது என்று தோன்றுகிறது.இந்த மழை சலிப்பதே இல்லை. முதல் காதல் போல.நினைக்க நினைக்க நனைந்திடும் சுகம் தரும்.திடிரென அழைப்பு மணி ஒலித்தது.என்னடா பண்றே? என் நண்பி தான்.கொஞ்சம் தனியா வாயேன்..உன் கிட்ட பேசனும்.. எதுவும் சொல்லாமல் laptop lock பண்ணிவிட்டு வெளியே வந்தேன்.சாரல் அடித்தது.டேய் அவ ஊரில் இருந்து India வராடா…
மனதில் இருட்டு,மின்னல்…மழை வரும் போல் இருந்தது…வேகமாக துடிக்க ஆரம்பித்தது இதயம்…மனதினுள் மழைக்காலம்.. டேய்ய்ய்…. என்னடா ?
மீண்டும் அதே கேள்வி…விடைதேடும் அவசரம்…தவிப்பை காட்டிக்கொள்ளவில்லை.முடியவும் முடியாது.ஓ ஹோ… உன் கிட்ட சொல்லிட்டாங்களோ எஜமானி .. அதான் என் கிட்ட சொல்றியோ…? என்றேன்.
நீ திருந்தவே மாட்டடா..போ…போய் வெள்ளைக்காரன் கொடுக்கிற மாடுகளை போய் பார்த்துட்டே இரு…அதானே உன் வாழ்க்கை..போ…என்று திட்டி விட்டு வைத்து விட்டாள்.
எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பி அவள்…அவள் பாடு இன்னும் சிரமம்தான்…அறிவுக்கு புரிகிறது…இருந்தாலும் பாழாய்போன மனசுதான் ஜெயிக்கிறது.12 வருட பரிதவிப்பு…ஒருநாளில் அதை கொட்ட இயலாது. வழியில் கடந்து சென்ற என் Team Member ஏய் சூர்யா,சுனாமி வார்னிங் வந்து இருக்கு..அதனால்..மானேஜர் வீட்டுல இருந்து வேலை பார்க்க போறாராம்..சொல்லிவிட்டு சென்றது ஒரு மின்னல்…!!!
எது எப்படியாக இருந்தாலும் இந்த பெண்களை மட்டும் என்னால் வெறுக்க முடியவில்லை… ஒவ்வொரு பிம்பத்திலும் உன்னை காண்பதிலா..இல்லை..என்னை தவிக்க விட்டுசென்ற உன்னை தேடித்தேடி அலைவதில் உள்ள ஏக்கமா? எதுவென்று தெரியவில்லை…
கடைசியாக உன் தந்தையுடன் உன்னை பார்த்தது.அவர் பார்த்த பார்வையில் அவ்வளவு வெறுப்பு…காலம் முழுவதும் நான் சுமக்கும் அந்த வெறுப்பு…
வார்த்தைகளுக்குள் மாட்டிக்கொண்டு எங்களுக்கு நடுவில் நீ…. என் வாழ்க்கையை விட்டு விலகிய தருணம்… நெருஞ்சி முள்ளாய்….தைக்கிறது..
நினைக்கவே பயமாய் இருந்தது.ஒரு Cigarette எடுத்து பற்றவைத்து கொண்டேன்… நெருப்பாய்….புகையாய்…நீ தான்… நீ மட்டும் தான்…!!!!!சாரல் மழை தூறல் போட்டு….இப்போது பலத்தமழையாகவே படுகிறது..!!!மழை…மழை…மனதினுள் மழை…வெளியே எங்கும் மழை…!!!   எனக்கு மழையென்றால் நீ…. நீயென்றால் மழை…!!!!ஒரு மழைக்கால காலையில் தான்…என் உலகில் நீ முழுவதுமாய் மூழ்கிப்போனாய்…ஒரு மழைக்கால மாலையில் தான்…என்னுள் முழுவதுமாய் உன்னை தொலைத்தேன்…ஒரு மழைக்கால மதியத்தில் தான்…உன் கைகளைப்பற்றி பிடித்துக்கொண்டேன்…அந்த விரல்களை சேர்த்து வைத்த குடையை கூட இன்றுவரை பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன்… நன்றிக்கடன்…!!!ஒரு மழைக்கால இரவினில் தான்..கொஞ்சும் நிலா சாட்சியாக… உன்னை கண்களால் பார்த்து… கவிதையாய்…  பற்றிக்கொண்டு…காதலாய் கசிந்துருகி….இதழ் பதித்த தருணங்களிலும் சிரித்து சந்தோஷமாய் துள்ளிக்குதித்து முத்தமிட்ட இதே மழை….!!!!
நிகழ்வுகள் தான் வேறு…இயற்கையோ ஒன்றுதான்…!!!அதுபோல்… என் வாழ்க்கை பயணங்கள் என்பது வேறுவேறு என்றாலும்..என்னுள் உறைந்த இயற்கையாகவே…எப்போதும்…எங்கும் நீ தான் வாழ்கிறாய்…!!! Cigarette கையை சுட்டது…அணைத்துவிட்டு வானத்தை பார்த்தேன்….. இப்போது அழுதுக்கொண்டிருக்கிறது….!!!!

Thursday, November 17, 2011

குளிரும்....,,!! இருட்டும்....,,!!

எண்ணிலடங்கா நினைவுகளில் _ எது
உன்னுடையதாக இருக்ககக்கூடும்
என்று தேடும் பொழுதுகளில் எல்லாம்
என் தோழனாகவே _ கூட
வலம் வருகின்றது இந்த
குளிரும் ....இருட்டும் .....!!!!!
இரண்டுக்கும் காலமும் இல்லை !!!!
குறிப்பிட்ட நேரமும் இல்லை !!!
அண்ட வெளியில்
ஆயிரம் கோடி உயிர்களுடன் இருந்தாலும்
என்னுள் ஒளிந்து கலந்து கொள்ளும் _ தன்னிகரில்லா
தனிமை போலவே
வாழும் பொழுதுகளில் வலம் வந்து கொண்டிருகின்றது _ இந்த
குளிரும்..... இருட்டும்.....!!!!!
இங்கு உறவுகள் கிடையாது ....,
களவுகள் தெரியாது....,
காவல்கள் புரியாது .....!!!!!
அடர்ந்த காட்டில் படரும் கொடிகள்
போலவே _ என் தனிமை தாண்டவத்தில்
பிணைந்து கொள்கின்றன இந்த
குளிரும்.... இருட்டும்....
எங்கும் எதிலும் நிலைத்து கொள்ளும்
காற்றினை போல _ என் தனிமைகளின்
தேடல்களை பின்தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கின்றன எப்போதும் _ இந்த
குளிரும் .... இருட்டும்...!!!!!!!

Thursday, January 6, 2011

உலகம் - ஜெயந்தன் பார்வையில்

உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"
-ஜெயந்தன்
நன்றி லேகா !!!

Friday, September 11, 2009

வெறுமை

வெளிச்ச‌த்தை விர‌ட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த‌
கான‌ல்வ‌ழி சாலையில் _ என் வாழ்க்கைச்ச‌க்க‌ர‌ம் ம‌ட்டும்
எப்ப‌டியோ வேக‌மாக
சுழன்று கொண்டுதான் இருக்கிற‌து!!!
த‌ண்ட‌வாள‌ம் இல்லாத‌ ர‌யில்...!!!
கட்டுபாடுக‌ள‌ற்ற‌ ம‌ன‌ம்...!!!
எங்கும் எதிலும் யாவ‌ரும் _ இதுவ‌ரை
வெறும் பிம்ப‌ங்க‌ளாக‌வே ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர்!!!
இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்திருப்பினும்_இன்னும்
என்னால் க‌ண்டுகொள்ள‌ முடிய‌வில்லை
என‌க்கே என‌க்கான ஒரு ச‌க‌ ம‌னித‌னை!!!!
ஒரு வேளை...... அவ‌ன்....
உங்க‌ளில் ஒருவ‌னாக‌
கூட‌ ஒளிந்திருக்க‌லாம்..!!!
விடை சொல்லுமா கால‌ம்???


Monday, July 27, 2009

என் இற‌ப்புக்கு முன் !!!

வெளியே தெரியாத வேர்களைப் போல்
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌...
இறுதியாக‌ என் மூச்சுக‌ள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிட‌மோ
சொல்லிவிட‌ வேண்டும் என்று துடிக்கிற‌து இத‌யம்...
அய்யோ..என் செய்வேன்..
அட‌ங்க‌ துடிக்கும் துடிப்புக்கு வேக‌ம் அதிக‌ம்..
அதையும் மீறி சொல்லிவிட‌ நினைக்கும் ம‌ன‌து..
இர‌ண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் ச‌ம்ம‌ண‌மிட்டு எக‌த்தாள‌ம் போடுகின்ற‌ன‌...!!!
அத‌ற்கு பின்னால் க‌ருகிய‌ க‌ன‌வுக‌ளும் ..
க‌லைந்து போன‌ க‌ற்ப‌னைக‌ளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற‌ ப‌ட்ட‌மாய் _ தாங்கி
நிற்கிற‌து கால‌ம் என்கிற‌ நூல்!!!!
எப்போது அறுந்து விழ‌ப்போகிற‌தோ
ஆவ‌லுட‌ன் பார்க்கும் இத‌ய‌மும்
அதை ஆவேச‌மாய் அட‌க்க முய‌லும் ம‌ன‌மும்...
கால‌ம்
இதோ..இப்போதே...
முடிய‌ போகிற‌தோ....
க‌டைசி வ‌ரை
இவ‌ற்றை நினைத்து நினைத்தே
சொல்ல‌ வ‌ந்த‌தையும் எவ‌ரிட‌மும் இய‌ம்பாம‌ல்...
மெள‌ன‌மாய் என‌க்குள் மெல்ல‌ சூழ்ந்த‌து _சாவு என்னும் இருட்டு....!!!!


Wednesday, March 18, 2009

ரகசியங்கள் - I


என்னுள்ளே எனக்காய் சில மாற்றங்கள்...
மழை வருவதற்க்கு முன்
முளைக்கின்ற‌ இருண்ட மேகங்கள் போல...!!!!
உன் காதல் உணர்வதற்க்கு முன்னரே
சில அதிர்வுகள்......
நினைக்கும் போதெல்லாம்
ஸ்பரிசிக்கும் உணர்வுகள்...
உலகினை சுற்றும் கோள்களை விட‌
வேகமாய் சுழலுகிறது என்னுள்
உந்தன் நினைவுகள்...!!!
நினைவுகளில் எல்லாம் நீயா? இல்லை
நீ மட்டுமே என் நினைவுக‌ளா?
எதுவாக‌ இருப்பினும்
இந்த‌ காத‌ல் வ‌ந்து சேரும் பொழுதினை விட‌
வ‌ரும் முன் நிக‌ழும் க‌ண‌ங்க‌ள்
எல்லாமே மிக‌வும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்ற‌ன‌..!!!

Monday, January 5, 2009

நட்பு....!!!


உன் வருகைக்காக காத்திருந்த‌
ஒவ்வொரு வினாடித்துளிக‌ளும்
ஒவ்வொரு யுக‌ங்க‌ளாய் _ நீ
வ‌ந்த‌பின் நாம் கூடி பேசி ம‌கிழ்ந்த‌
ஒவ்வொரு யுக‌ங்க‌ளும்
ஒவ்வொரு வினாடிக‌ளாய் போன‌து எப்ப‌டி???
மீண்டும் மீண்டும் கேட்டாலும் கிடைக்காத‌
அந்த‌ நாட்க‌ளை தேடி தேடியே _ என் வாழ்க்கை
கரைக்க‌ப்ப‌டும் என்றாலும்
நான் திரும்ப திரும்ப‌ கேட்ப‌து
உன‌க்காக‌ கால்வ‌லிக்க சைக்கிளில் சுற்றிய
அந்த ப‌சுமையான‌ நாட்க‌ள் வேண்டும்...!!!
கார‌ண‌மே இல்லாம‌ல் சிரித்து
போகும் வ‌ழியெல்லாம் சாலைக‌ளில்
வ‌ழிந்திட்ட‌ அந்த‌ ச‌ந்தோஷ க‌ண‌ங்க‌ள் வேண்டும்...!!!
நான் த‌வ‌று செய்தால் _ நீ
உரிமையோடு திட்டிய நாட்க‌ள் வேண்டும்...!!!
வாழ்கின்ற‌ வாழ்க்கை
ஒருநாளே என்று முடிவானால்
உன்னோடு இருக்கும்
இனிமையான‌ ப‌சுமையான‌
அந்த‌ ஒரு நாள் வேண்டும்...!!!
இன்னும் சொல்ல‌ப்போனால்
என் உயிர் உறையும் வ‌ரை
சில நட்புகள் வேண்டும்...
நிலைக்குமா...???



Friday, December 26, 2008

அப்பா..!!!

குழ‌ந்தை ப‌ருவ‌த்தில் கூடிவிளையாடும்
சிறுவர்க‌ள் சொல்லும் பேய்க்க‌தைக‌ள் கேட்டு..
விடியாத‌ இர‌வுக‌ள் எப்போது போகும் என‌ அழுது
விடிந்த‌ உட‌ன் _ கொல்லைக்கு செல்ல‌
துணைக்கு நீ வ‌ர‌வேண்டும்...!!! வ‌ருவாயே அப்பா..!!!

ப‌ள்ளி நாட்க‌ளில் யாரேனும் என்னை அடித்தாலோ
இல்லை நான் யாரையாவ‌து அடித்தாலோ
அந்த‌ இட‌த்தில் என‌க்காக‌ ஆஜானுபாகுவாய்
நீ வேண்டும்...!!! வ‌ருவாயே அப்பா...!!!

வ‌குப்பின் இடைவேளைக‌ளில் வாச‌லில்
விற்கும் துண்டு மாங்காய்,அவித்த‌ நெல்லிக்காய்
சிவ‌ந்த‌ ம‌ண் ச‌வ்வு மிட்டாய் வெள்ள‌ரிக்காய் _ வாங்கி
நானும் என் தோழிக‌ளும் கூட்ட‌மாக‌ ம‌கிழ்ந்து
சிரித்து பேசி சாப்பிட‌ _ காசு த‌ருவ‌த‌ற்கு
நீ வேண்டும்...!!! த‌ருவாயே அப்பா...!!!

வ‌ருட‌ முடிவில் விடுமுறை நாட்க‌ளில்
தேர்வு முடிவுக‌ளை தெரிந்து கொள்ள‌
"திக்திக்" துடிப்புக‌ளுட‌ன் ப‌ய‌ந்து கொண்டே
ப‌ள்ளிக்குசெல்லும் பொழுதுக‌ளில் _ என‌க்காக‌
என்முன் வ‌ந்து அறிவிக்க‌ நீ வேண்டும் என்று
நினைத்த‌ வேளைக‌ளில் நிஜ‌மாக‌வே வ‌ருவாயே ... அப்பா..!!!

க‌ல்லூரிக்கு போகிறாய்_கையில்
காசு நிறைய இருக்கட்டும்
என்று நான் எதிர்பாராத தருணங்களில்
என்னை திகைப்பில் ஆழ்த்த‌
நீ வேண்டும் _ செய்தாயே அப்பா...!!!

நான் கைவீசி சாலைக‌ளில்
ந‌ட‌ந்த‌தை விட‌
உன் கைப்பிடித்தே நட‌ந்த‌து அதிக‌ம்...!!!
இப்ப‌டி
நீ என‌க்கு கொடுத்த‌ பாச‌ங்க‌ளையும்
நீ உரைத்த‌ ச‌ந்தோஷ‌ங்க‌ளையும்
உன‌க்கு பிடித்த‌ க‌ல்வியையும் கொண்டு
உல‌கை ஜெயிப்பேன் _ உன் கால‌டியில் வைக்க‌ என்று
உன்னை பிரிந்த‌ நாள் முத‌லாய்...

நீயே என் அறிவாக‌வும்
நீயே என் ஆற்ற‌லாக‌வும்
நீயே என் குருவாக‌வும் _ கொண்டு
இன்று நீ நினைத்த‌ எண்ண‌ங்க‌ளையெல்லாம்
செய‌லாக்கி உன்னை தேடி வ‌ருகிறேனே ...அப்பா...!!!
எங்கே போனாய் நீ????

"இற‌ப்பு என்ப‌து இழ‌ப்பு அல்ல‌..!!!
நீ கொண்ட‌ ம‌ன‌த்தினால் _ நித்த‌ம்
ஒருவ‌ரை அன்பினால் பாராட்டும்
ம‌னித‌ருக்கு இற‌ப்பு என்ப‌து இல்லை...
அத‌னால்
இழ‌ப்பு என்ப‌தும் இல்லை" _ இது
நீ என‌க்கு சொன்ன‌ மேற்க்கோள்...!!!

ஆனாலும் இதில் உன்னை வைத்து
பார்க்க‌ ஏனோ ம‌ன‌ம் சிக்கி..
சிதறி சிதைந்து போகிற‌து...!!!
எங்கு ம‌றைந்து போனாய்...?
ஏன் இற‌ந்து போனாய்...???

உன் பிம்ப‌மாய் நான் ம‌ட்டும்
அலைகிறேன் _ உன் ம‌க‌ளாய்...!!!!

Wednesday, December 24, 2008

க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!


கண்களை மூடி கனவினை தேடும்
முகங்களுக்கிடையே
என் மனதினை திற‌ந்து யுக‌ங்க‌ளை
காண‌ விழையும் இந்த‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
யார் வேண்டுமானாலும் வ‌ர‌லாம்
எது வேண்டுமானாலும் வ‌ர‌லாம்..
விதி வில‌க்குக‌ள் இல்லை
ம‌ன‌க்குதிரை ஓடும் வ‌ரை ஆட்ட‌ம்..!!!
எல்லைக‌ளுக்கு அப்பாற்ப்ப‌ட்ட‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
நான் யாரோவாக‌...யாரோ நானாக‌
மாற்றி போடும் கால‌ங்க‌ள்..மீண்டும் _ அந்த‌
யாரோ இன்னொருவ‌ராக‌.. அவர்க‌ளின்
எல்லைக்குள் நானாகி திளைக்கின்ற‌ கண்ணாமூச்சி
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
சில‌ க‌ன‌வுக‌ள் திரைக‌ளில் இருந்து க‌ள‌வாட‌ப்ப‌ட்டு
நான் க‌ண்ட‌ சில‌வ‌ற்றைக‌ள் திரைக‌ளுக்குள்ளே
க‌ள‌வாய் போய் பிற‌கு காணாம‌லே க‌லைகின்ற‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
இதை ப‌டிக்கும் இந்த‌ நொடி உங்களுக்குள்
உதிக்கும் ஏதோ அர்த்த‌ம‌ற்ற‌ க‌ன‌வுக‌ளும்
ஆர்ப்ப‌ரிக்கும் நினைவுக‌ளும் விற்ப‌னைக்கே உரித்தாகுகிற‌து!!!
எடுத்து கொண்டாடும் உரிமையாள‌ர்
உங்க‌ளில் யாரோ ஒருவ‌ராய் இருக்கலாம்...
இல்லை ஏதும் இல்லாத‌தாய் இருக்க‌லாம்...!!!

Friday, December 12, 2008

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!


எரிகின்ற கொள்ளியில்

கரைகின்ற எண்ணை போல்

சூழ்நிலைக‌ள் என்னுள் எரிந்து

த‌ரையில் உதிரும் சாம்ப‌லாய்

த‌க‌ர்ந்து கொண்டிருக்கிற‌து_என் த‌னிமை!!!

நான் நானும் அல்ல‌... வேறு யாரும் அல்ல‌

நிர்வாண‌மே இங்கு நிர‌ந்த‌ர‌ம்

புரிய‌வில்லை _ அரிதார‌ங்க‌ள்

பூசும் ம‌ன‌ங்க‌ளுக்கு

க‌லைந்த‌ வேஷ‌ங்க‌ளும்

க‌லைந்த‌ பின் அடுத்து ந‌ட‌க்கும் ஒப்ப‌னைக‌ளும்

க‌ண‌ப்பொழுதில் க‌ண்முன்னே

நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கிற‌து...!!!

இவைய‌னைத்தையும் வீறுகொண்டு

விள‌க்க‌மாயுரைக்க‌ _ இய‌ம்ப‌வில்லை

என் நாக்கு..!!!

போனால் போக‌ட்டும்

ம‌ன‌ங்கெட்ட‌ மானுட‌ர்க‌ள்..!!

பாழாய் போன‌ ச‌ட‌ங்குக‌ளும்

ப‌ழ‌கி புளித்த‌ சாஸ்திர‌ங்க‌ளும் _ அணிந்து கொள்ள‌

என்ன தான் ஆசையோ இவ‌ர்க‌ளுக்கு

எடுத்து சொன்னால்

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!

ச‌த்த‌ங்க‌ள் சூழ்ந்து ச‌ச்ச‌ர‌வுக‌ள் மிகுந்து

வெறும் பிண்ட‌ங்க‌ள் ஆளும் நாட்டு வாழ்க்கையின்

க‌ட‌வுளாய் இருப்ப‌தை விட‌_இருள் ம‌ட்டுமே புர‌ளும்

காட்டு வாழ்க்கையில் ஒரு

மிருக‌மாய் அலைவ‌தே மேல்....!!!!!

நான்...!!!!

காண்போரை கவர்ந்திழுக்க‌
வ‌ழிந்தோடும் வெண்மை தான்
நில‌வுக்கு அழ‌கு என்றாலும் _கண்டவுடன்
தெறித்து ஓடி அதனுள் ப‌ட‌ர்ந்திருக்கும்
சிறு கருமை போல‌ எங்கும் எப்போதும்
த‌னித்து இருக்க‌வே விரும்புகிறேன்
நான்...!!!!

எங்கே அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம் ???!!!!

பிறந்த‌வுட‌ன் பொட்டையா?
அதுவும் ரெட்டையா என்று கேட்டு
ப‌க்க‌த்துவீட்டு பாட்டி ஆர‌ம்பித்து வைத்த‌
என் பிற‌ந்த‌ தின‌ம்...!!!!

"பொற‌ந்த‌வுடனேயே
பெத்த‌வ‌ளை முழுங்கிடுச்சு
இன்னும் யாரை முழுங்க‌ போகுதோ"
என்று எதிர்தாத்து மாமி ப‌ய‌ந்து
நான் வ‌ளர்ந்த‌ தின‌ங்க‌ள்...!!!

வெண்ணை வைக்கா விட்டாலும்
சுண்ணாம்பு வைக்க‌ த‌வ‌றாத‌
சித்தியின் கொடுமை தின‌ங்க‌ள்...!!!

"உன் நன்மைக்காக நினைத்து
இப்படி பண்ணிடேனம்மா" என்ற
அப்பாவின் புல‌ம்ப‌ல் தின‌ங்க‌ள்..!!!

பெரிய‌வ‌ளாயிட்ட‌ இனி எத‌ற்கு ப‌டிப்பு
பேசாம‌ வீட்டை பார்த்துக்கோ
என்று குழ‌ந்தைக‌ளுக்கு ஆயாவாகிய‌
என் இள‌மை மிகுந்த‌
கொடுமையான‌ தின‌ங்க‌ள்...!!!

சாலையில் ந‌ட‌க்கும் போது
சிறுவ‌ன் முத‌ல் கிழ‌வ‌ன் வ‌ரை
க‌ழுகு பார்வை பார்த்து
என்னுள் குறுகி சுருங்க‌வைத்த‌
ந‌த்தைகூட்டு தின‌ங்க‌ள்...!!!

நான் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் மேல் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் வாழ்க்கை இந்த‌ பாழாய் போன‌
க‌ல்யாண‌ ச‌ந்தையில் விற்க‌ப்ப‌ட்ட‌ தின‌ங்க‌ள்..!!!

திரும‌ண‌த்திற்கு பிற‌கு ஒவ்வொரு நாளும்
என் ச‌ம்ம‌த‌மின்றி
நான் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ கருப்பு தின‌ங்க‌ள்..!!!

பெண்தான் வேண்டும் என்று த‌வ‌மிருக்கையில்
இர‌ட்டை ஆண் குழ‌ந்தைக‌ளுக்கு தாயான‌
அவ‌ல‌ தின‌ங்க‌ள்..!!!

க‌ண‌வ‌னை இழ‌ந்த‌ பின்ன‌ர்,
குழ‌ந்தைக‌ளுக்காக‌வே வாழ்ந்து
ஓடாய் தேய்ந்து வீழ்ந்த‌ தின‌ங்க‌ள்..!!!

முதுமையின் வெம்மையில்
பிள்ளைக‌ளின் நிழ‌லில் வாழ‌ நினைக்கையில்
முதியோர் இல்ல‌மே என் இட‌ம் என‌
அவ‌ர்க‌ள் தீர்மானித்த அவமான‌ தின‌ங்க‌ள்..!!!

த‌னிமையை தேடி..ஓடி..நாடி..
க‌ளைத்து உயிர்விட்ட‌
என் வாழ்வின் இற‌ந்த‌ தின‌ங்க‌ள்..!!!
ஆமாம்............
இவ‌ற்றில் எங்கே வ‌ருகிற‌து
என்னுடைய‌
"அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம்?!!!!"

Sunday, November 30, 2008

என் நிக‌ழ்கால‌ம்!!!

வாகனங்கள் வேகமாக கடக்கின்ற சாலையிலே
ஓங்கி உயரமாய் வளர்ந்திருக்கின்ற‌ ம‌ர‌ங்க‌ள்...
ந‌ம் பிரிவிற்கு சாட்சியாய் மெள‌னி சாய்கின்ற‌ன...!!
எப்போதும் இருப்பேன் உன்னுட‌ன் என்று
எதிர்ப்ப‌து யாராக இருந்தாலும் த‌விர்த்து _ உன்னை
தாங்க‌ வ‌ரும் வேளையில்
எங்கே(கோ) போனாயே நீ!!!
இழ‌ந்த‌தெல்லாம் போதும்
இனி என்ன‌ மிஞ்சியிருக்கிற‌து
எஞ்சி கிட‌க்கின்ற‌ எச்சில் வாழ்க்கையில்_
எங்கோ எத‌ற்காக‌வோ எப்பொழுதோ
என‌க்கு கிடைத்த‌ _ உன் நினைவுக‌ளே
சுவ‌டுக‌ளாய் ப‌ட‌ர்ந்து நீ...ண்டு வ‌ருகிற‌து...!!!
நீ இல்லாத‌ என் நிக‌ழ்கால‌ம்!!!

Monday, November 10, 2008

இரவுகள் ரகசியமானவை

இரவுகள் ரகசியமானவை....
வேடங்கள் பல அணியும் _ வேதனை
முகமூடி வாழ்க்கையில்
வெளிப்ப‌டையான‌
போதை போல் என்னை
விரும்ப‌ வைக்கும் இந்த‌ கார்கால‌
நீண்...ட‌ இர‌வுக‌ள்
என்றும் மிக‌ ரகசியமானவை !!!

த‌வ‌ளைக‌ளின் ரீங்கார‌ம்
ம‌ழைத்துளியின் ச‌ல‌ச‌ல‌ப்பு
ஜ‌ன்ன‌லை விரிக்கையில்
உள்ள‌மும் உறைய‌ வைக்கும்
இந்த‌ காற்று...
குளிர்கால‌ இர‌வுக‌ளுக்காக‌வே
ப‌க‌லெல்லாம் எதிர்பார்த்து
காத்திருக்க‌ வைக்கும்
என் த‌னியான‌ இர‌வுக‌ள்
என்றும் ர‌க‌சிய‌மான‌வை!!!

சிலிர்க்க‌ வைக்கும்
நினைவுக‌ளுட‌னும்
வ‌ர‌ப்போகும் நிக‌ழ்வுக‌ளுக்கான‌
க‌ன‌வுக‌ளுட‌னும்...
எல்லையில்லா பிரபஞ்ச‌த்தில்
நான் ம‌ட்டும் ஒருத்தியாய்
ம‌கிழ்வுட‌ன் ஆர்ப‌ரித்து அல‌ற‌
வைக்கும் _ இந்த‌
இர‌வுக‌ள் என்றும் ர‌க‌சிய‌மான‌வை!!!

என் சுய‌ந‌ல‌த்தின் பெருவாரியான‌
வெளிப்பாடுக‌ளில் இருந்து வீறு கொண்டு
அடைக்க‌ப்ப‌ட்ட‌ வில்லில்
ஆவேச‌மாய் கிள‌ம்பும்
அம்புக‌ள் போல்
வெளியேற‌
காத்திருக்கும்
த‌விப்புக‌ள் மிகுந்த‌ _ இந்த‌
நீண்...ட‌ இர‌வுக‌ள்
என்னுள் என்றுமே
மிக‌ மிக‌ ர‌க‌சிய‌மான‌வை...!!!!

Thursday, November 6, 2008

ம‌து அருந்துவ‌தும்,புகை பிடிப்ப‌தும்....

என்ன எழவுக்கு இந்த software company'க்கு வேலைக்கு வந்தேனோ....படிச்சது வேற..!பழகி ஏத்துகிட்டது வேற..!!வெள்ளிகிழமை ஆனாலே, ஏனோ தெரிய வில்லை(ஒரு வேளை வேலை ஏதும் செய்யாமலே வெட்டியா இருக்கேனோ?)இப்படி system unlock செய்யும் போது என்னுடைய அலுவலக ந்ண்பர் (பெண்ணை ந்ண்பர் என்பதா? தோழி என்பதா சரவணா?)காபி அடிக்கலாம் வாங்க'ன்னு அழைத்து போனார்...!!ஆறுதலாக இருந்தது,உண்மையை சொன்னால் நம்பூவீர்களா? எனக்கு தெரியாது.திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் சாயங்கால வெளிச்சங்களையே நான் பார்த்தது கிடையாது...!!!
மாலை 5 மணி இருக்கும்..வெளியே வந்தவுடன் சுள்ளென்று வெயில் கண்களை கூசியது..மனதும் தான்... எல்லாம் வெறும் காகிதங்களுக்காக..என்ன அந்த அச்சடித்த காகிதங்கள் தான் நம் தலையெழுத்தை நிர்மாணிக்கின்றன...!!!ப‌ண‌ம் ப‌த்தும் செய்யும்...
அம்மாவை ஆசையாய் சினிமாவிற்கு கூட்டி போக‌...
ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ட‌ற்க‌ரையில் நனைந்திட...
நினைத்த வேளையில் நினைத்த பொருட்களை வாங்கிட...இப்படி பல பத்துகளை இந்த அச்சடித்த‌ காகிதங்கள் கொண்டு தான் வாங்க முடிகிறது...!!!என்னை பொறுத்தவரை இந்த நகரம் நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக மாறி மாறி வலம் வந்து கொண்டுதானிருக்கிறது.கடைசியில் இதில் நிலைத்து நிற்பவர்களே வெற்றி பெற்றவர்கள்.மேலும் தோற்பவர்களுக்கு இங்கு இடமில்லை,துரத்தி அடிக்கப்படுகிறார்கள்.பிச்சை எடுத்தோ அல்லது அடுத்தவனை ஏய்த்து பிழைத்தோ ஜெயித்து நிலைக்க வேண்டும் என்ற வெறியுடனும் நிறையக்கூட்டம் இங்கு சுற்றி கொண்டுதான் இருக்கிறது..."சிந்தித்த வேளையில்
திடீரென்று என் நண்பர் என்னை பார்த்து,"எனக்கு தண்ணி அடிக்கணும் போல இருக்குங்க.. ஏன் தம் அடிக்கணும் போல கூட இருக்குங்கணு பேச ஆரம்பிச்சாங்க..!!!ரொம்ப துடிப்பான,சின்ன பொண்ணு.. நல்ல அறிவுள்ள தெளிவுள்ள பொண்ணு..!!!
கேட்ட உடனே எனக்கு அதிர்ச்சி இல்லை...மாறாக ஆச்சரியம் தான் முதலில்...!!!ஏங்க பொண்ணுங்க மது அருந்தகூடாது,புகை பிடிக்ககூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? ஏன் பொண்ணுங்க'ன்னா இவ்வளவு சட்ட திட்டமெல்லாம் பேசறாங்கன்னு புரியலை..பசங்க மட்டும் கஷ்டம் வந்தா மது அருந்துவதும் ..இல்ல வார இறுதியில்(weekend) சும்மா ஒரு ஜாலிக்காக(இதைபத்தி நிறைய யோசிச்சு இருக்கேங்க..) சேர்ந்து த‌ண்ணி அடிக்க‌ற‌து'ன்னு எல்லாம் ப‌ண்றாங்க‌ .. அது மாதிரி நாமும் ப‌ண்ணா என்ன‌ த‌ப்பு??என்னை யோசிக்க‌ வைத்த‌து அந்த‌ கேள்வி...!!!
நான் ப‌திலுக்கு,"ஏங்க‌,ந‌ம்ம‌ ம‌னுஷ‌ வாழ்க்கையில் Body Rthythm and Mind Rhythm'னு இர‌ண்டு வ‌கை இருக்கு.இந்த இர‌ண்டும் ச‌ரியான‌ அள‌வு இல்லைன்னா,அதாவ‌து ந‌ம்ம‌ mind rhythm and body rhythm ச‌ரியான நிலையில் இல்லாம‌ல் போனாலோ அல்ல‌து ஏதேனும் ஒன்று அதிக‌மாய் போனாலோ..நாம் சில‌ செய‌ல்க‌ளை தேடி நாடி போகிறோம்... அது என‌க்கு வ‌ய‌லின் இசைக்கிற‌தும் ,பாட்டு கேட்ப‌தும் இல்லை க‌விதை எழுதுவ‌தும்,த‌னியாக‌ இருட்டில் சிறிது நேர‌ம் த‌னித்து நிற்ப‌தும்..குழ‌ந்தையின் சிரிப்பும்" ஆகிறது.நாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு சுழ்நிலையில் வளர்கிறோம்,அப்படி வளரும் நிலைகளில் நமக்குள் நெருங்(க்)கி நம்மை பாதிக்கும் நிகழ்வுகளில் மனம் மாறி போய்விடுகிறது.. ஒருவேளை என் கூட இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து மது அருந்தும் போது நானும் போவேனோ? ஒரு எண்ணம் ஒரு வரியாய் மனதுள் அலைந்தது...!!!பேசிக்கொண்டே சென்றோம்..என் நண்பரின் manager எங்களை பார்த்துக்கொண்டே போனார்.. வெறுப்பாக‌ இருந்த‌து.

இந்த தொழிலில் ஒருத்த‌ருக்கொருத்த‌ர் சிரித்து பேச‌க்கூடாது..என் இருக்கையை விட்டு எழுந்து இன்னொருத்த‌ரிட‌ம் பேசினால்,என்னவோ அந்த கம்பெனியே நஷ்ட‌த்தில் மூழ்கிட்ட‌ மாதிரி நிலைத்த பார்வைகள்..(இவங்க தான் தூண்கள்)... காக்கைகள் கூட பரவாயில்லைனு சிலநேரங்கள்ள தோணும்..!!மெல்ல நடக்க ஆரம்பித்தோம்..!!!
கெட்ட பழக்கம்,கெட்ட மனசு இதை பத்தி என்ன நினைக்கறீங்க'ன்னு (உங்களுக்கும் தான்) கேள்வியை கேட்டு அடுத்த‌ விவாத‌த்தை தொட‌ர்ந்தோம்.என் நண்பருக்கு ஒரு ந‌ண்ப‌ர்..அந்த பெண் ந‌ல்ல‌ வேலை,M.S.W முடித்து ஒரு social worker.. அவ‌ங்க‌ நிறைய‌ ம‌து அருந்துவ‌தும் புகை பிடிப்ப‌தும் பய‌ம் அறியா பெண்.. ஒரு நாள் அவ‌ங்க‌ அப்பா திட்டினாருன்னு இரவு 2 ம‌ணிக்கு வீட்டை விட்டு கூட‌ போனாங்க‌ன்னு சொல்லும் போது அவ‌ரை காண‌ வேண்டும் என்ற ஆவ‌ல்..அட‌க்கி கொண்டேன்...!!!
இவ்வாறு,விவாத‌ங்க‌ளும் வினாக்க‌ளும் முற்று பெறாம‌லே,எங்க‌ள் இட‌ம் வ‌ந்த‌தும் வெட்ட‌ப்ப‌ட்ட‌ வாழைம‌ர‌ங்க‌ள் போல் பேசிய‌தையே ம‌ற‌ந்து,சிரித்து வைத்து(முக‌மூடி).. bye சொல்லி ...வேலையில் மூழ்கினேன்.....!!!!!
தொல்லைபேசி அழைத்த‌து..வீட்டில் இருந்து அழைப்பு.என் த‌ங்கை மிர‌ட்டும் தொனியில் "எங்க‌ இருக்க‌ ?" இந்த கேள்வி என்னை மிக‌வும் பாதித்த கேள்வி.நான் "வேறு எங்க அலுவ‌ல‌க‌த்தில் தான்"..அவ‌ள் "எப்ப‌ வ‌ருவே"(என்ன‌டா இது..ச்சே..) இந்த ஏன்,எத‌ற்கு,எப்போது என்று வேலையில் தான் அம்புக‌ள் என்றால் வீட்டிலுமா?.."வ‌ருவேன்னா வ‌ருவேன்..வீட்டுக்கு தான் வ‌ருவேன்" ஏன் என‌க்கு இந்த வெறுப்புன்னே தெரியலை.. அது என்னை அந்த‌ இரவு முழுவ‌தும் வாட்டி வதைத்த‌ வேளையில் ..

"ச்சே..!! என்ன‌டா வாழ்க்கை இது.. வாழ‌வும் பிடிக்க‌லை,சாக‌வும் பிடிக்க‌லை..நாமும் என் ந‌ண்ப‌ர் சொன்ன அந்த பெண் மாதிரி நினைச்ச‌தை செய்ய‌லாமே..என் வெறுப்பு (யார் மீது??) கரையும் அள‌விற்கு ம‌து அருந்தியும் ..புகை பிடித்து கொண்டும் நடக்க வேண்டும் போல் தோன்றியது... இது தான் mob-psychology'யா?என்ன‌ங்க உங்க‌ளைத்தான் கேட்கிறேன்...பெண்க‌ள் ம‌து அருந்துவ‌தும்,புகை பிடிப்ப‌தும் செய்ய‌க்கூடாத‌ குற்ற‌ங்க‌ளா? அங்கு ஆண்க‌ளுக்கு ம‌ட்டுமே அனும‌தி இல‌வ‌ச‌மா???!!!!

Tuesday, November 4, 2008

நாம்

பெண்மைக்கு மென்மை உண்டோ
இல்லையோ _ எனக்கு தெரியாது...
ஆனால் மென்மைக்கும் சிறிது
பெண்மை உண்டு
என்று நாம் பேசி செல்லும்
போது உணர்ந்திருக்கிறேன்...

Monday, October 20, 2008

தனிமை


மழை காலங்களில்
இரவு நேரங்களில் விட்டு விட்டு போகும்
மின்சாரம் போல‌
வாழ்க்கையும் சில சமயங்களில்
பிடிக்காமலே கழிகிறது...!!!


இருளே வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே இருளாகவும்
வாழும் எனக்கு ‍_ இந்த தனிமை
ஒரு வரப்பிரசாதமாகவே இருந்திருக்கிறது..!!


கலந்து போகும் மனிதர்களும்
கலைந்து போகும் மனங்களும்
நிறைந்து எங்கும் பிம்பங்களே
சூழ்ந்த இந்த மனிதர்கள் வாழும்
மயானத்தின் கொள்ளியாக
ஒளிரும் _ இந்த தனிமை
என் விடுத‌லையாக‌வே இருந்திருக்கிற‌து!!!


வெறுமையின் இட‌ங்க‌ளை நிரப்ப‌வும்
அலை போல் சூழும் மனிதர்களிடையே
சிறு படகு போல் தனியே என்னை
பயணிக்க வைக்கும் ‍__ இந்த தனிமை
என்றும் என் விருப்பமாகவே இருந்திருக்கிறது..!!!


தனிமையே இனிமையாகவும்
இனிமையே தனிமையாகவும்
தாகங்கள் நிரம்பிய இவ்வேட்கை
உலகினில் தீரா நதி போல்
என்னை சுற்றி வளைக்கும் __ இந்த தனிமையே
இன்று என் துணையாக‌வும் விரிந்திருக்கிற‌து...!!!!

Sunday, September 7, 2008

இவள் யாரோ ??!!

"இப்ப என்ன நடந்து போச்சுன்னு எல்லாரும் வேடிக்கை பார்கறீங்க ?" அவள் கத்திய கத்தலில் தெரு சனம் கூடி இன்னும் சற்று உற்று பார்த்தது ...!!!
ஒரு கருப்பு ஜீன்ஸ் டி - ஷர்ட் இறுக்கி போட்ட ஒற்றை குதிரை வால்.கோபத்தில் தலை ஆடும் போது ஆடுகிறது ..!
அந்த சாலையில் தார் போட்டிருந்தார்கள் ,ஒரு குறுக்கு பாதையில் தெரியாமல் வண்டியை நுழைத்து விட்டாள்.கூட அவள் தங்கை வேறு தன் கூர் செருப்பால் (ஹீல்ஸ்) தடம் பதித்து விட்டாள் ...
அந்த பெண்ணிற்கு மூச்சு வாங்கியது.. கோபத்தில் முகம் சிவந்து குரல் நடுங்கியது !!
"அதான் தெரியாம வந்தாச்சு ...தப்புன்னு தெரிஞ்சுடுச்சு ..இப்ப வண்டிய திருப்பி கிட்டு தானே இருக்கேன்..இப்ப என்னத்துக்கு எல்லாரும் மாஞ்சு மாஞ்சு பார்த்து கிட்டு இருக்கீங்க... ??"
அந்த தெரு அக்ரகாரம் போல இருந்தது..முடிவில் ஒரு சேரியும் ஒட்டி கொண்டிருந்தது.முனையில் இரு நாய்கள் சாக்கடையில் விழுந்து புரள .. ஒரு குழந்தை பிஸ்கட்டைமண்ணில் போட்டு,பிறகு அதை வாயில் போட்டு சப்பி கொண்டுபாவம் முடி நிறைய வேண்டுதலாக இருக்க கூடும்,தெரிய வில்லை ..அதுவும் இவர்கள் போட்ட சத்தத்தில் கை கொட்டி சிறிது கொண்டிருந்தது...
ஒரு வழியாக யார் உதவியும் இல்லாமல் வண்டியை திருப்பி விட்டாள் ..!!
தங்கையை பார்த்து வண்டியில் ஏறுமாறு கூச்சலிட்டாள்..
கூட்டம் அவள் திருப்பி விட்டாலே என்று வருத்தத்துடன் களைய ஆரம்பித்தது..
என்ன மனுஷங்க இவங்க ? ஏன் இந்த விஷயத்துல மட்டும் இருக்குற ஆத்திரம் குரோதம் வேற எந்த விஷயத்துலயும் இல்ல .. ஒரு வேலை அந்த அம்மாவின் மகனோ மருமகனோ அந்த பாதையில் ஒட்டி இருந்தால் சும்மா இருந்து இருப்பாரோ ....??
ஏன் இந்த ஊரில் எல்லாரும் இப்படி இருக்காங்க...? காய்கறி வாங்கும் விஷயத்தில் தொடங்கும் இந்த ஏமாற்று வியாபாரம் எல்லா இடத்திலும் புகுந்து விளையாடுகிறது ...
வசதிக்கு ஏற்றார் போல் செய்கையில் மாறுபாடு இருந்தாலும் சேயுஉம் நோக்கம் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது ..
ஏன் இப்படி சக மனித தர்மம் என்பது என்ன? கிடையாதோ? இல்லை இவர்களுக்கு தெரியாதோ ? என் ஊரில் உள்ள மனிதர்களை வந்து இந்த நகரத்தில் இறக்கி விட்டு இவர்களை எல்லாம் துரத்தினால் என்ன ஆகும் ?" என்று அவள் தங்கையிடம் கோபமாக உரக்க பேசிகொண்டே இதோ என் வடிக்கு முன்னால் தான் செல்கிறாள்...
இவள் யார்... என் மனம் எனதுள் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது ...
சிலரை பார்த்தால் வித்தியாசமாக இருக்கும் ..சிலருடம் பழகினால் வித்தியாசமாக இருக்கும் .. இதோ இவள் போகிற திசையில் இருந்து வரும் தென்றல் கூட எனக்கு வித்யாசமாகவே பட்டது ...
மனசுக்குள் ஒரு உற்சாகம் தொற்றி கொள்ள அவள் போகும் பாதை பார்த்து என் மனதும் வண்டியும் ... புலம்பி கொண்டே செல்லும் அவளை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை ..
சிரிப்பு வந்தது ... என்னடா மடையா உனக்கு எவ்வளவோ வேலை இருக்க புயல் போல் செல்லும் இவளைப்போய் பின்தொடர்வது ஏனோ என்று மனம் நினைக்க அவளயே அவள் பேசுவதையே கேட்க வேண்டும் என்ற உந்துதலில் என்னை பின்தொடர்ந்த ஆட்டோ முட்டியதில் அவர்களுக்கு அருகில் "கிரீச்" என்ற சத்தத்துடன் பிரேக் போட்டு கால்கள் தார் சாலையில் சிரைக்க விழுந்து தொலைத்தேன் ...
அவள் தன் வண்டியை தங்கையிடம் பிடித்து கொள்ள சொல்லி விட்டு வேகமாய் ஓடி வருகிறாள் .. நிழல் போல் தெரிகிறது ... ஐயோ கண்கள் இருட்டுகின்றதே ..
ஐயோ ... என்ற என் உயிரின் ஓலஙகளில் உறைந்து போனேன்...
(தொடரும்)

முதல் காதல்

உன்னை பிரிந்த நாள் முதலாய்
நானும் - உன்னை
தேடுகிறேன்
சாலையோர கடைகளில்
பேருந்தின் பயணங்களில்
கூட்ட நெரிசல்களில்
தனிமையின் நிழல்களில்
முறிந்து போன முதல் காதலின்
முற்று பெறாத அடையாளமாய் - நீ !!!