Sunday, November 30, 2008

என் நிக‌ழ்கால‌ம்!!!

வாகனங்கள் வேகமாக கடக்கின்ற சாலையிலே
ஓங்கி உயரமாய் வளர்ந்திருக்கின்ற‌ ம‌ர‌ங்க‌ள்...
ந‌ம் பிரிவிற்கு சாட்சியாய் மெள‌னி சாய்கின்ற‌ன...!!
எப்போதும் இருப்பேன் உன்னுட‌ன் என்று
எதிர்ப்ப‌து யாராக இருந்தாலும் த‌விர்த்து _ உன்னை
தாங்க‌ வ‌ரும் வேளையில்
எங்கே(கோ) போனாயே நீ!!!
இழ‌ந்த‌தெல்லாம் போதும்
இனி என்ன‌ மிஞ்சியிருக்கிற‌து
எஞ்சி கிட‌க்கின்ற‌ எச்சில் வாழ்க்கையில்_
எங்கோ எத‌ற்காக‌வோ எப்பொழுதோ
என‌க்கு கிடைத்த‌ _ உன் நினைவுக‌ளே
சுவ‌டுக‌ளாய் ப‌ட‌ர்ந்து நீ...ண்டு வ‌ருகிற‌து...!!!
நீ இல்லாத‌ என் நிக‌ழ்கால‌ம்!!!

Monday, November 10, 2008

இரவுகள் ரகசியமானவை

இரவுகள் ரகசியமானவை....
வேடங்கள் பல அணியும் _ வேதனை
முகமூடி வாழ்க்கையில்
வெளிப்ப‌டையான‌
போதை போல் என்னை
விரும்ப‌ வைக்கும் இந்த‌ கார்கால‌
நீண்...ட‌ இர‌வுக‌ள்
என்றும் மிக‌ ரகசியமானவை !!!

த‌வ‌ளைக‌ளின் ரீங்கார‌ம்
ம‌ழைத்துளியின் ச‌ல‌ச‌ல‌ப்பு
ஜ‌ன்ன‌லை விரிக்கையில்
உள்ள‌மும் உறைய‌ வைக்கும்
இந்த‌ காற்று...
குளிர்கால‌ இர‌வுக‌ளுக்காக‌வே
ப‌க‌லெல்லாம் எதிர்பார்த்து
காத்திருக்க‌ வைக்கும்
என் த‌னியான‌ இர‌வுக‌ள்
என்றும் ர‌க‌சிய‌மான‌வை!!!

சிலிர்க்க‌ வைக்கும்
நினைவுக‌ளுட‌னும்
வ‌ர‌ப்போகும் நிக‌ழ்வுக‌ளுக்கான‌
க‌ன‌வுக‌ளுட‌னும்...
எல்லையில்லா பிரபஞ்ச‌த்தில்
நான் ம‌ட்டும் ஒருத்தியாய்
ம‌கிழ்வுட‌ன் ஆர்ப‌ரித்து அல‌ற‌
வைக்கும் _ இந்த‌
இர‌வுக‌ள் என்றும் ர‌க‌சிய‌மான‌வை!!!

என் சுய‌ந‌ல‌த்தின் பெருவாரியான‌
வெளிப்பாடுக‌ளில் இருந்து வீறு கொண்டு
அடைக்க‌ப்ப‌ட்ட‌ வில்லில்
ஆவேச‌மாய் கிள‌ம்பும்
அம்புக‌ள் போல்
வெளியேற‌
காத்திருக்கும்
த‌விப்புக‌ள் மிகுந்த‌ _ இந்த‌
நீண்...ட‌ இர‌வுக‌ள்
என்னுள் என்றுமே
மிக‌ மிக‌ ர‌க‌சிய‌மான‌வை...!!!!

Thursday, November 6, 2008

ம‌து அருந்துவ‌தும்,புகை பிடிப்ப‌தும்....

என்ன எழவுக்கு இந்த software company'க்கு வேலைக்கு வந்தேனோ....படிச்சது வேற..!பழகி ஏத்துகிட்டது வேற..!!வெள்ளிகிழமை ஆனாலே, ஏனோ தெரிய வில்லை(ஒரு வேளை வேலை ஏதும் செய்யாமலே வெட்டியா இருக்கேனோ?)இப்படி system unlock செய்யும் போது என்னுடைய அலுவலக ந்ண்பர் (பெண்ணை ந்ண்பர் என்பதா? தோழி என்பதா சரவணா?)காபி அடிக்கலாம் வாங்க'ன்னு அழைத்து போனார்...!!ஆறுதலாக இருந்தது,உண்மையை சொன்னால் நம்பூவீர்களா? எனக்கு தெரியாது.திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் சாயங்கால வெளிச்சங்களையே நான் பார்த்தது கிடையாது...!!!
மாலை 5 மணி இருக்கும்..வெளியே வந்தவுடன் சுள்ளென்று வெயில் கண்களை கூசியது..மனதும் தான்... எல்லாம் வெறும் காகிதங்களுக்காக..என்ன அந்த அச்சடித்த காகிதங்கள் தான் நம் தலையெழுத்தை நிர்மாணிக்கின்றன...!!!ப‌ண‌ம் ப‌த்தும் செய்யும்...
அம்மாவை ஆசையாய் சினிமாவிற்கு கூட்டி போக‌...
ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ட‌ற்க‌ரையில் நனைந்திட...
நினைத்த வேளையில் நினைத்த பொருட்களை வாங்கிட...இப்படி பல பத்துகளை இந்த அச்சடித்த‌ காகிதங்கள் கொண்டு தான் வாங்க முடிகிறது...!!!என்னை பொறுத்தவரை இந்த நகரம் நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக மாறி மாறி வலம் வந்து கொண்டுதானிருக்கிறது.கடைசியில் இதில் நிலைத்து நிற்பவர்களே வெற்றி பெற்றவர்கள்.மேலும் தோற்பவர்களுக்கு இங்கு இடமில்லை,துரத்தி அடிக்கப்படுகிறார்கள்.பிச்சை எடுத்தோ அல்லது அடுத்தவனை ஏய்த்து பிழைத்தோ ஜெயித்து நிலைக்க வேண்டும் என்ற வெறியுடனும் நிறையக்கூட்டம் இங்கு சுற்றி கொண்டுதான் இருக்கிறது..."சிந்தித்த வேளையில்
திடீரென்று என் நண்பர் என்னை பார்த்து,"எனக்கு தண்ணி அடிக்கணும் போல இருக்குங்க.. ஏன் தம் அடிக்கணும் போல கூட இருக்குங்கணு பேச ஆரம்பிச்சாங்க..!!!ரொம்ப துடிப்பான,சின்ன பொண்ணு.. நல்ல அறிவுள்ள தெளிவுள்ள பொண்ணு..!!!
கேட்ட உடனே எனக்கு அதிர்ச்சி இல்லை...மாறாக ஆச்சரியம் தான் முதலில்...!!!ஏங்க பொண்ணுங்க மது அருந்தகூடாது,புகை பிடிக்ககூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? ஏன் பொண்ணுங்க'ன்னா இவ்வளவு சட்ட திட்டமெல்லாம் பேசறாங்கன்னு புரியலை..பசங்க மட்டும் கஷ்டம் வந்தா மது அருந்துவதும் ..இல்ல வார இறுதியில்(weekend) சும்மா ஒரு ஜாலிக்காக(இதைபத்தி நிறைய யோசிச்சு இருக்கேங்க..) சேர்ந்து த‌ண்ணி அடிக்க‌ற‌து'ன்னு எல்லாம் ப‌ண்றாங்க‌ .. அது மாதிரி நாமும் ப‌ண்ணா என்ன‌ த‌ப்பு??என்னை யோசிக்க‌ வைத்த‌து அந்த‌ கேள்வி...!!!
நான் ப‌திலுக்கு,"ஏங்க‌,ந‌ம்ம‌ ம‌னுஷ‌ வாழ்க்கையில் Body Rthythm and Mind Rhythm'னு இர‌ண்டு வ‌கை இருக்கு.இந்த இர‌ண்டும் ச‌ரியான‌ அள‌வு இல்லைன்னா,அதாவ‌து ந‌ம்ம‌ mind rhythm and body rhythm ச‌ரியான நிலையில் இல்லாம‌ல் போனாலோ அல்ல‌து ஏதேனும் ஒன்று அதிக‌மாய் போனாலோ..நாம் சில‌ செய‌ல்க‌ளை தேடி நாடி போகிறோம்... அது என‌க்கு வ‌ய‌லின் இசைக்கிற‌தும் ,பாட்டு கேட்ப‌தும் இல்லை க‌விதை எழுதுவ‌தும்,த‌னியாக‌ இருட்டில் சிறிது நேர‌ம் த‌னித்து நிற்ப‌தும்..குழ‌ந்தையின் சிரிப்பும்" ஆகிறது.நாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு சுழ்நிலையில் வளர்கிறோம்,அப்படி வளரும் நிலைகளில் நமக்குள் நெருங்(க்)கி நம்மை பாதிக்கும் நிகழ்வுகளில் மனம் மாறி போய்விடுகிறது.. ஒருவேளை என் கூட இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து மது அருந்தும் போது நானும் போவேனோ? ஒரு எண்ணம் ஒரு வரியாய் மனதுள் அலைந்தது...!!!பேசிக்கொண்டே சென்றோம்..என் நண்பரின் manager எங்களை பார்த்துக்கொண்டே போனார்.. வெறுப்பாக‌ இருந்த‌து.

இந்த தொழிலில் ஒருத்த‌ருக்கொருத்த‌ர் சிரித்து பேச‌க்கூடாது..என் இருக்கையை விட்டு எழுந்து இன்னொருத்த‌ரிட‌ம் பேசினால்,என்னவோ அந்த கம்பெனியே நஷ்ட‌த்தில் மூழ்கிட்ட‌ மாதிரி நிலைத்த பார்வைகள்..(இவங்க தான் தூண்கள்)... காக்கைகள் கூட பரவாயில்லைனு சிலநேரங்கள்ள தோணும்..!!மெல்ல நடக்க ஆரம்பித்தோம்..!!!
கெட்ட பழக்கம்,கெட்ட மனசு இதை பத்தி என்ன நினைக்கறீங்க'ன்னு (உங்களுக்கும் தான்) கேள்வியை கேட்டு அடுத்த‌ விவாத‌த்தை தொட‌ர்ந்தோம்.என் நண்பருக்கு ஒரு ந‌ண்ப‌ர்..அந்த பெண் ந‌ல்ல‌ வேலை,M.S.W முடித்து ஒரு social worker.. அவ‌ங்க‌ நிறைய‌ ம‌து அருந்துவ‌தும் புகை பிடிப்ப‌தும் பய‌ம் அறியா பெண்.. ஒரு நாள் அவ‌ங்க‌ அப்பா திட்டினாருன்னு இரவு 2 ம‌ணிக்கு வீட்டை விட்டு கூட‌ போனாங்க‌ன்னு சொல்லும் போது அவ‌ரை காண‌ வேண்டும் என்ற ஆவ‌ல்..அட‌க்கி கொண்டேன்...!!!
இவ்வாறு,விவாத‌ங்க‌ளும் வினாக்க‌ளும் முற்று பெறாம‌லே,எங்க‌ள் இட‌ம் வ‌ந்த‌தும் வெட்ட‌ப்ப‌ட்ட‌ வாழைம‌ர‌ங்க‌ள் போல் பேசிய‌தையே ம‌ற‌ந்து,சிரித்து வைத்து(முக‌மூடி).. bye சொல்லி ...வேலையில் மூழ்கினேன்.....!!!!!
தொல்லைபேசி அழைத்த‌து..வீட்டில் இருந்து அழைப்பு.என் த‌ங்கை மிர‌ட்டும் தொனியில் "எங்க‌ இருக்க‌ ?" இந்த கேள்வி என்னை மிக‌வும் பாதித்த கேள்வி.நான் "வேறு எங்க அலுவ‌ல‌க‌த்தில் தான்"..அவ‌ள் "எப்ப‌ வ‌ருவே"(என்ன‌டா இது..ச்சே..) இந்த ஏன்,எத‌ற்கு,எப்போது என்று வேலையில் தான் அம்புக‌ள் என்றால் வீட்டிலுமா?.."வ‌ருவேன்னா வ‌ருவேன்..வீட்டுக்கு தான் வ‌ருவேன்" ஏன் என‌க்கு இந்த வெறுப்புன்னே தெரியலை.. அது என்னை அந்த‌ இரவு முழுவ‌தும் வாட்டி வதைத்த‌ வேளையில் ..

"ச்சே..!! என்ன‌டா வாழ்க்கை இது.. வாழ‌வும் பிடிக்க‌லை,சாக‌வும் பிடிக்க‌லை..நாமும் என் ந‌ண்ப‌ர் சொன்ன அந்த பெண் மாதிரி நினைச்ச‌தை செய்ய‌லாமே..என் வெறுப்பு (யார் மீது??) கரையும் அள‌விற்கு ம‌து அருந்தியும் ..புகை பிடித்து கொண்டும் நடக்க வேண்டும் போல் தோன்றியது... இது தான் mob-psychology'யா?என்ன‌ங்க உங்க‌ளைத்தான் கேட்கிறேன்...பெண்க‌ள் ம‌து அருந்துவ‌தும்,புகை பிடிப்ப‌தும் செய்ய‌க்கூடாத‌ குற்ற‌ங்க‌ளா? அங்கு ஆண்க‌ளுக்கு ம‌ட்டுமே அனும‌தி இல‌வ‌ச‌மா???!!!!

Tuesday, November 4, 2008

நாம்

பெண்மைக்கு மென்மை உண்டோ
இல்லையோ _ எனக்கு தெரியாது...
ஆனால் மென்மைக்கும் சிறிது
பெண்மை உண்டு
என்று நாம் பேசி செல்லும்
போது உணர்ந்திருக்கிறேன்...